Sunday, February 16, 2014

அம்மா கதை:

அம்மா இந்தக் கதையை என் சின்ன வயதில் சொன்னாள். இன்றைக்கும் மறக்க முடியாமல் அது வாழ்வினூடே தொடர்ந்து பயணிக்கிறது.

ஒரு ஊரில் ஒரு மகன் சதா கெட்ட வார்த்தைகளால் அடுத்தவர் மனதை புண்படுத்தி வருத்திக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த அப்பாவுக்கு மன வேதனை. ஒரு நாள் மகனைக் கூப்பிட்டு நீ எப்பொழுதெல்லாம் ஒருவரை புண்படுத்துகிறாயோ அப்பொழுதெல்லாம் நம் வீட்டிற்கு பின்னாலிருக்கின்ற மரத்தில் இந்த ஆணியை அடி என்று ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்தார். அவனும் சரி என்று செய்துவந்தான்.

ஒரு நாள், மரத்தில் அடிக்க முடியாத அளவுக்கு ஆணிகள் நிறைந்து விட்டது.
மகன் அப்பாவிடம் வந்து சொன்னான், "அப்பா நான் இன்னும் ஒரு ஆணி கூட அடிக்க முடியாத அளவுக்கு மரம் நிறைந்து விட்டது. நான் இத்தனை பேரை மனம் புண்படும் படியா பேசி இருக்கிறேன்" என்று வருந்தினான். 

அப்பா ஒரு பரிகாரம் சொன்னார். "சரி. நீ எப்பொழுதெல்லாம் நீ வருதப்படச் செய்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறாயோ அப்பொழுதெல்லாம் மரத்தில் இருந்து ஒரு ஆணியைப் புடுங்கிவிடு" என்று சொன்னார். மகனும் அவ்வாறே செய்து வந்தான்.

ஒரு நாள், மரத்தில் ஒரு ஆணிகூட இல்லை. மகனுக்கு ஒரே சந்தோசம்.
தன் அப்பாவைக் கூட்டி வந்து மரத்தின் முன் நிறுத்தி சொன்னான், "அப்பா இங்கே பாருங்கள் மரத்தில் ஒரு ஆணி கூட இல்லை. நான் வருதப்படச் செய்த எல்லோரையும் நான் மகிழ்ச்சிப் படுத்திவிட்டேன். நான் இப்போது முழுவதும் நல்லவனாக மாறிவிட்டேன்" என்றான்.

அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார், "அந்த மரத்தைப் பார். எப்படி கோரமாக ஆணித்தழும்பேறி சிதைந்திருக்கிறது. அந்த மரத்தை பசுமையாக முன்போல் உன்னால் எப்பொழுதும் மாற்ற முடியாது. அது போல் நீ வருதப்படச் செய்தவர்களை மகிழ்ச்சிப் பட வைத்து விட்டாலும், நீ ஏற்படுத்திய அந்த வேதனைத் தழும்பு என்றும் அவர்கள் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கும்".

மகனுக்கு அப்போது தான் புரிந்தது தான் செய்து வந்த தவறு !!! 

Friday, February 14, 2014

பிபரவரி 14

இன்னைக்கு காலைல 9 மணிக்கு அப்பாட்ட இருந்து போன் வந்துச்சு.

"ஏய் மண்டத்தல...என்னடா பண்ணிட்ருக்க?"

"இப்பதாம்ப என்துருச்சேன்"

"இப்பதான் எந்துருச்சயா? கோயிலுக்குப் போகுல?"

"எதுக்குப்பா?"

"இன்னைக்கு என்ன கெழம?"

"வெள்ளிக் கெழம...அதுக்கு எதுக்கு கோயிலுக்குப் போகணும்? எதுனா விசேசமா?"

"நல்லா யோசிச்சு பாரு"

"இருங்க காலண்டர பாக்கறேன்....ஹ்ம்ம்...அட இன்னைக்கு பவுர்ணமி...அதுக்கா?"

"இல்ல...நல்ல யோசிடே..."

"ஆமா இது மாசி பவுர்ணமி தான...சித்ரா பவுர்ணமி கூட இல்லையே...ஹ்ம்ம். உங்க கலியாண நாளா?"

"இல்ல"

"அட ஆமா...அது மாசி 4 தானே...இன்னக்கு ரெண்டுதானே ஆச்சு...ஹ்ம்ம்..தெரிலப்பா நீங்களே சொல்லுங்க"

"அட அறிவுகெட்ட லூசு பயலே..இன்னைக்கு பிபரவரி 14...காதலர் தினம்..போயி ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா இன்னைக்கும் போல என்னைக்கும் இருக்கணும்னு சாமி கும்புட்டுட்டு வாங்க!!!"

"யப்போய்...இது என்ன திருவிழாவா...நீரு டிவி பாத்து ரொம்பதான் கெட்டுடீரு"

"சரி சரி காதலர் தின வாழ்த்துக்கள்!!!

"நல்லதாப் போச்சு போங்க!!"

கட்!!


Tuesday, February 11, 2014

கல்வி வியாபாரம்:

கடந்த வாரம் "பிராயிலர் பள்ளிகள்" என்ற தலைப்பில் விகடனில் பாரதி தம்பி எழுதியிருந்த நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் பற்றிய கட்டுரை மேல் தட்டு மற்றும் உயர் நடுத்தர வர்கத்தின் பணத்தைக் கொட்டி படிக்க வைக்கும் திறன் பற்றியும் இந்த பள்ளிகளால் தத்து எடுக்கப்பட்டு, அங்கே நடக்கின்ற கொடுமை தாளாமல்  உயிரை மாய்த்துக்கொண்ட "நன்றாய்" படிக்கும் ஏழை மாணவர்கள் பற்றியும் அலசி ஆராய்ந்திருந்தது.

ஒரு சாதாரண அரசு துவக்கப்பள்ளியிலும் மற்றும் அரசு உதவிபெறும் கிருத்தவ மேலாண்மைப் பள்ளியிலும் (இலவசமாக அல்லது அதிக  பட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி)தமிழ் வழிப் பயின்று என்னால் ஓரளவு இந்த சமுதாயத்தில் தாக்குப்பிடித்து முன்னேற முடிகிற போது இலட்சங்களில் கொண்டுபோய் கொட்டும் இன்றைய அவலம் மிகுந்த மன வேதனை தருகிறது.

இந்த கொடுமைக்கார தனியார் பள்ளிகளை விட சிறந்த அரசு மாதிரிப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைத்து  அவர்களை நல்ல மனிதர்களாக இந்த சமுதாயத்திற்கு தர முயல வேண்டுமே அன்றி வெறும் பணம் பண்ணும் இயந்திரங்களாக  அல்ல. நண்பர்களே சிந்தியுங்கள்!!

நாயர் மெஸ் (Nair Mess):

நாயர் மெஸ் (Nair Mess):

கடந்த இரண்டு வாரங்களாக எழுதவில்லையே தவிர கடைக்குப் போய் சாப்பிடாமல் இல்லை. திருப்பூர் போக, போன சனிக்கிழமை மாலை 5:30 மங்களூர் எக்ஸ்பிரஸை தவறவிட்டு, நடப்புப் பயணச் சீட்டில் பதிந்த பொழுது இரவு  8:45 ஆழப்பி எக்ஸ்பிரஸ் தான் கிடைத்தது :(.

மூன்று மணிநேரம் "தேமே" என்று சென்ட்ரல் ஸ்டேஷனில் விஜய் சேதுபதி சொல்லும் அறிவுரையை யார் கேட்பது என்று யோசித்த போது, திருவல்லிக்கேணி "நாயர் மெஸ்" இல் போய் சாப்பிட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. கிரீன் சிக்னல் கிடைக்க பத்து நிமிடத்தில் மெசில் ஆஜர்.

சேப்பாக்கம் ஸ்டேடியம் போனவர்கள் யாரும் நாயர் மெஸை அறியாமல் இருக்க மாட்டார்கள். பெல்ஸ் ரோட்டில் ஸ்டேடுயத்திற்கு எதிரில் உள்ள பஸ் ஸ்டாண்டை ஒட்டிய சந்தில் நாலாவது கடை. மெஸ் என்றால் "மெஸ்"  இல்லை. நல்ல தரமான "உயர் தர" உணவகம் தான்.

நல்ல குருவாயூர் சந்தனம் வைத்த "சேட்டன்" தான் ஆர்டர் எடுத்தார். ஸ்பெஷல் என்னவென்று கேட்க, சிக்கன் சாப்ஸ், சிக்கன் பாயா, பொரிச்ச வாவல் மீன், வஞ்சிரம், ஈரல், மட்டன் சுக்கா, சிக்கன் வறுவல் என அடுக்கினார். இட்லிக்கு மாட்சாக சிக்கன் சாப்சும் சைட் டிஷாக வஞ்சிரமும் சாப்பிட்டோம். வஞ்சிரம் வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் இல்லாமல் ப்ரௌன் நிறத்தில் மொருவலாக இருந்தது. கேரள தேசத்தின் ஸ்பெஷல் போல.

சாப்பிட்டு முடித்ததும் ஜீரா வாட்டர் தந்தார்கள். கல்லூரி ஞாபகம் வந்தது :)

மொத்தத்தில் அருமையான இரவு உணவு. கடைசியாக வெளியே வந்ததும் தான் சொன்னாள்,

"இங்கே பிரயாணி நன்றாய் இருக்கும்"

"உனக்கு எப்படி தெரியும்?"

"நான் அஞ்சு வருசமா இதே தெருமுனைல இருக்கற ஹாஸ்டல்ல தான இருந்தேன்"

"???!!!"